Wednesday, July 11, 2012

இயற்கை விவசாயத்துக்கு திரும்புங்கள் – இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அழைப்பு


அதிக சத்து மற்றும் மருத்துவக் குணங்கள் நிறைந்த பாரம்பரியமிக்க நெல் ரகங்களை சாகுபடி செய்து மீண்டும் இயற்கை விவசாயத்துக்கு திரும்புமாறு விவசாயிகளுக்கு இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அறைகூவல் விடுத்துள்ளார்.
புதுக்கோட்டை அடுத்த வாகைப்பட்டியில் ரோஸ் தொண்டு நிறுவனத்தின் சார்பில் பாரம்பரிய நெல் விதைகளை பாதுகாப்பது குறித்த விவசாயிகளுக்கான கருத்தரங்கு நடந்தது. இதை துவக்கிவைத்து இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பேசியதாவது:
  • உணவு தானியங்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்காக வெளிநாடுகளிடம் ஆலோசனைகள் பெற்று நவீன ரக தானியங்களை குறிப்பாக நெல் ரகங்களை அறிமுகம் செய்தனர்.
  • இவற்றை சாகுபடி செய்வதற்காக பல வகையான இரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகள், வேளாண் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
  • இதன் விளைவாக நம் முன்னோர்கள் சாகுபடி செய்த பாரம்பரியமிக்க நெல் ரகங்கள் படிப்படியாக மறையத் துவங்கியது. ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகள் பயன்படுத்துவதால் மண் வளம் பாதிக்கப்பட்டு விளை நிலங்கள் பாலைவனங்களாக மாறிவருகிறது.
  • கால்நடைகளுக்கு தீவன(வைக்கோல்) தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
  • இவை எல்லாவற்றுக்கும் மேலாக நவீன ரக நெல்லில் இருந்து கிடைக்கும் அரிசியை சமைத்து சாப்பிடும் மனித இனம் வித விதமான நோய் தாக்குதலுக்கு உள்ளாகி பரிதவித்து வருவதை காண முடிகிறது.
  • இந்த நிலை மாறவேண்டும் என்பதற்காக நம் முன்னோர்கள் பின்பற்றிய பயிர் சாகுபடி முறைகளை நாமும் பின்பற்றவேண்டியது அவசியமாகிறது.
  • இதற்காக தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் பாரம்பரியமிக்க நெல் விதைகளை தேடி கண்டு பிடித்து அவற்றை இயற்கை விவசாய முறையில் சாகுபடி செய்து விதைகளாக மாற்றி விவசாயிகளுக்கு வழங்குவதென முடிவு செய்துள்ளோம். எங்களுடைய இந்த முயற்சி வெற்றி பெற்றுள்ளது.
  • தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சேகரிக்கப்பட்ட பூங்கார், மாப்பிள்ளை சம்பா, கருடன் சம்பா, பனங்காட்டு குறுவை, சிவப்பு கவுணி ஆகிய 5 வகையான பாரம்பரியமிக்க நெல் விதைகள் இயற்கை விவசாயத்தை மட்டுமே பின்பற்றி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
  • புதுக்கோட்டை மாவட்டம் மருதாந்தளை, வாகைப்பட்டி, மாணிக்கம்பட்டி, வடசேரிப்பட்டி, மேலூர், கீழமுத்துடையான்பட்டி,, மேல முத்துடையான்பட்டி, முத்துக்காடு, சுந்தரக்காடு, மேலப்பளுவஞ்சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 13 விவசாயிகள் கிட்டத்தட்ட 10 ஏக்கர் நிலத்தில் இவற்றை சாகுபடி செய்து மகசூலில் சாதனை படைத்துள்ளனர்.
  • இதன்மூலம் 300 மூடை நெல் ரகங்கள் கிடைத்துள்ளது.
  • இவற்றை தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு விதையாக விற்பனை செய்து பரவலாக்கம் செய்வதற்கான நடவடிக்கைகள் துவங்கியுள்ளத.
  • இவை தவிர செம்புளிச்சம்பா, சூரக்குறுவை, இலுப்பைப்பூ சம்பா, சண்டிகார், கருத்தக்கார் ஆகிய 6 வகையான பாரம்பரியமிக்க நெல் ரகங்களும் விரைவில் பரவலாக்கம் செய்யப்படும்.
  • பாரம்பரிய நெல் விதைகளை பொறுத்தமட்டில் வறட்சி மற்றும் வெள்ளத்தை தாங்கி வளரும் தன்மையுடையது.
  • குறைந்த செலவில் அதிக மகசூல் கிடைக்கும்.
  • நேரடி விதைப்பு மற்றும் நடவுக்கு உகந்தது.
  • மண் வளம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். உயரமாக வளரும் ஆற்றல் படைத்தது என்பதால் கால்நடைகளுக்கு தீவன(வைக்கோல்) தட்டுப்பாடு இருக்காது.
  • நாம் தற்போது பயன்படுத்திவரும் அரிசி ரகங்களை விட பல மடங்கு புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து மிக்கது என்பதால் இவற்றை சமைத்து உண்பதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது.
  • எதிர்கால நம் சந்ததியினர் உடல் ஆரோக்கியத்துடன் நோயற்ற வாழ்வு வாழவேண்டும் என விரும்பினால் நம் முன்னோர்கள் பயன்படுத்திய பாரம்பரியமிக்க நெல் ரகங்களை சாகுபடி செய்ய விவசாயிகள் அனைவரும் முன்வரவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி: தினமலர்

No comments:

Post a Comment